அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி- எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை: ஐகோர்ட்
- tamil public
- Jan 9
- 1 min read
வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன் மற்றும் சி.குமரப்பன் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
மனுவுக்கு 27-ந்தேதிக்குள் பதில் அளிக்கும் படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்துள்ளனர்.

சென்னை:
அ.தி.மு.க. உள்கட்சி விவகாரம் தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகளில் முடிவு காணும் வரை அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது.
இதுகுறித்து 2017-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை தேர்தல் ஆணையத்துக்கு புகார் மனு அனுப்பியுள்ளேன். என் மனுவை பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என சூரியமூர்த்தி என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது மனுதாரரின் கோரிக்கை 4 வாரத்தில் பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட ஐகோர்ட்டு நான்கு வாரங்களில் சூரியமூர்த்தி மனுவை பரிசீலித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.
இந்த உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வரும் நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை அங்கீகரிக்க கூடாது என முன்னாள் எம்.பி. ரவீந்திர நாத் மற்றும் கே.சி.பழனிசாமி ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தனர்.
இந்த மனுவின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன் மற்றும் சி.குமரப்பன் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஆரிமா சுந்தரம், கட்சியில் உறுப்பினர்களாக இல்லாத தனிப்பட்ட நபர்கள் கட்சி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு இருக்கிறார்கள். இதை விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை என்று வாதிட்டார்.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக உரிமையியல் வழக்குகள் நிலுவையில் இருக்கக்கூடிய நிலையில் அதே விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த முடியாது என கூறி தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
மேலும் மனுவுக்கு 27-ந்தேதிக்குள் பதில் அளிக்கும் படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்துள்ளனர்.
#ADMK #Eddappadi palaniswamy #Madras HC #Tamilpublicnews
Comments