top of page

அம்மாப்பேட்டையில் தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து 10 மாணவர்கள் காயம்

  • பள்ளி குழந்தைகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

  • குறுகலான சாலையில் வேன் இயக்கப்பட்டதால் விபத்து.

School Van Accident
School Van Accident

அம்மாப்பேட்டை:

  • ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூர் பகுதியில் எம்.ஏ.எம். எக்ஸல் என்ற ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு அம்மாபேட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதி களை சேர்ந்த மாணவர்கள் பலர் படித்து வருகிறார்கள். அவர்களில் பலர் பள்ளி வேனில் அழைத்து செல்வது வழக்கம்.

  • இந்த நிலையில் அம்மாபேட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து பள்ளியில் படிக்கும் மாணவர்களை இன்று காலை வேனில் ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு சென்று கொண்டு இருந்தது.

  • இதையடுத்து அந்த பள்ளி வேன் அம்மா பேட்டையில் இருந்து ஊமாரெட்டியூர் செல்லும் சாலையில் அரசு கால்நடை மருத்துவமனை வழியாக பள்ளி வேன் ஓட்டுநர் அம்மாபேட்டையை சேர்ந்த குணசேகரன் (வயது 38) என்பவர் வேனை ஓட்டி சென்று கொண்டு இருந்தார்.

  • அப்போது சாலையில் சிறிய அளவிலான வளைவில் திருப்பும் போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் வலது புறம் சாலையை ஒட்டி உள்ள கரும்பு தோட்டத்தில் கவிழ்ந்து விபத்துக்கு ள்ளானது.

  • இந்த விபத்தில் பள்ளி வேனில் பயணம் செய்த பள்ளி குழந்தைகள் 10-க்கும் மேற்பட்டவர்கள் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதை கண்ட பள்ளி குழந்தைகள் கதறி அலறினர்.

  • இது பற்றி தகவல் அறிந்து அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதையடுத்து 108 ஆம்புலன்சு தகவல் கொடுத்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் வாகனம் வருவதற்கு கால தாமதம் ஆனதாக கூறப்படுகிறது. அதற்குள் தகவல் கிடைத்ததும் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

  • இதைத்தொடர்ந்து தங்கள் குழந்தைகள் விபத்தில் சிக்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பள்ளி வாகனத்தில் இருந்து தங்களது குழந்தைகளை மீட்டு இரு சக்கர வாகனங்களில் ஏற்றிக்கொண்டு அருகே உள்ள அம்மா பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு முதல் உதவி சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

  • அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து பள்ளி குழந்தைகள் மேல் சிகிச்சைக்காக அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  • அம்மாபேட்டை அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளான சம்பவம் பெற்றோர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • மேலும் குறுகலான சாலையில் அதிக நீளமுடைய பள்ளி வேன் இயக்கப்பட்டதால் விபத்து நிகழ்ந்திருப்பதாக பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  • தகவல் அறிந்து வந்த அம்மாபேட்டை போலீசார் விபத்திற்கு உள்ளான பள்ளி வேனை, கிரேன் எந்திரம் கொண்டு வந்து அப்புறப்படுத்தி விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

#School Van Accident


Comments


bottom of page