தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- இந்திய வானிலை ஆய்வு மையம்
- tamil public
- Dec 7, 2024
- 1 min read
காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும்.
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் இன்றும், நாளையும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது

Northeast Monsoon IMD சென்னை:
பூமத்திய ரேகையை யொட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில், அதாவது அந்தமானுக்கு தெற்கே, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இது, மேலும் வலுவடைந்து, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, வருகிற 12-ந் தேதிக்கு இலங்கை மற்றும் தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என எதிர்பாா்க்கப்படுகிறது.
இதன் காரணமாக இன்று முதல் வருகிற 12-ந்தேதி வரை தமிழகத்தில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், வருகிற 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் கடலூா் தொடங்கி ராமநாதபுரம் வரை உள்ள கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் இன்றும், நாளையும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. அதேசமயம், புயலாக உருவாவதற்கு சாதகமான சூழல்கள் தற்போது வரை இல்லை.
ஃபெஞ்சல் புயல் பாதையில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நகர வாய்ப்புள்ளது.
இந்த புயல் சின்னத்தால், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டாவில் வருகிற 11-ந்தேதி (புதன் கிழமை) முதல் 14-ந்தேதி (சனிக்கிழமை) வரை மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தனியாா் வானிலை ஆய்வாளா்கள் கணித்துள்ளனா்.
#Northeast Monsoon #IMD






Comments